Monday, 21 November 2011

உங்களுக்காக

ஓட்டமும்  நடையுமான என் பயணங்களில்
சிரத்தையின்றி நான் கேட்கும் உரையாடல்களில்
ஒரு சில வார்த்தைகள்
உங்களை நினைவுகூறும்
 என் நிகழ்காலம் நிறுத்த வைக்கும்
 நினைவுகள்  நோக்கி ஓட வைக்கும்
ஓயாமல் பெய்த மழை
ஒருவழியாய்  நிரப்பி சென்றது பள்ளங்களை
இன்னும் சிலரின் உள்ளங்களை.....
ஆம்....
புது மழை கழுவிச் சென்றது
என் புழுதி படிந்த நினைவுகளை
நிரம்பி வழிந்த  நினைவுகளால்
சலசலக்கும் சிலர் நெஞ்சம்
சத்தமில்லாத சில வார்த்தைகளோடு
இதோ என் சலசலப்பு........

Friday, 4 November 2011

நான் இன்று....

பிறப்பிடம் தொலைத்து
பிழைப்பிடத்தில்  
மாசுகளுக்குக்கிடையில்  மக்கள் தேடுகிறேன்
மக்களிடையே மனிதம் தேடுகிறேன்
காலத்தை சேமிக்க சுவாசிக்க மறக்கிறேன்
திடீரென்று நினைவு  வந்து
பெருமூச்சு விடுகிறேன்
பசுமை தேடி அலைகிறேன்
பார்த்துவிட்டால் தனிமையில் சிரிக்கிறேன்
சில நேரம்,
மரங்களுக்கு கால்கள் இல்லையென
மனம் நோகிறேன்
கால்தடுக்கும் இடம் கல்லறை என
காணும் இடமெல்லாம் சாலைகள்
காட்சிகளெல்லாம் விபத்துகள்
 
அவசரங்களுக்கு மத்தியில்
அரிதாய் ஒரு புன்னகை
அடிக்கடி சிரிப்பது உடலுக்கு நல்லதாம்!!!!
அதற்காக........

Tuesday, 18 October 2011

உன்னில்.....

உன் அருகாமையில்
உலகிலிருந்து  தொலைகிறேன்
உயிரை பிரிகிறேன்

உன் தூரங்களில்
சார்ந்திருக்கிறேன் அல்லது
காத்திருக்கிறேன்

உன் பார்வையில்
ஒவ்வொரு செல்லிலும்
இன்னொரு நானாகிறேன்

உன் பிரிவில்
 கலங்குகிறேன்,என் கண்ணீர் குடிக்கும்
உன் விரலுக்காய்

உன் கோபத்தில்
நானும் என் சுவாசமும்
 ஒன்றாய்  உறைகிறோம்

உன் சிரிப்பில்
என் உறைநிலை சுவாசத்தை
உருக்குகிறேன்

உன் பொய்களில்
உண்மை மறக்கிறேன்
ஊமை ஆகிறேன்

உன் உறக்கத்தில்
மற்றொரு உன்னை காண்கிறேன்
மழலை செய்கையில்.....

Thursday, 22 September 2011

உறக்கம்

காதலில் காத்திருக்கும் இமைகள் இரண்டும்
கைகோர்க்கும் தருணமிது ..
தற்காலிக மரணமிது
விலை கொடுக்காமலே வேண்டியது கிடைக்கும்
விந்தை உலகமிது வேற்று கிரகமிது..
உயிர்கள் அனைத்தும் அழகாவது உறக்கத்தில் மட்டுமே
ஆம்,
மழலை மொழியினும்  மழலை தூக்கம் மனம் மயக்கும்
கற்பனையும் கருத்துகளும் சிலருக்கு கிடைப்பது இங்கேதான்
மறந்துவிட்ட முகங்களை மனம் அசைபோடுவதும் இங்கேதான்
உறக்கம் -இது மாயை
                      இது மயக்கம்
                      இது மௌனம்
மீண்டும் மீண்டும் சாகத்தோன்றும்  தற்காலிக மரணம் .......... 

Wednesday, 14 September 2011

இறகு

பறப்பதை மறந்து தரையோடு தங்கிடாது
இது,
       உயிருள்ள பறவையை பிரிந்த  
       ஒற்றை சிறகு

உன்னை வழியனுப்பிய பின்....

உவகை என்பது இதுதானா ?
என் கண்களும் சிரிப்பது உண்மைதானா?
தனிமையின் அவஸ்தை உன் வருகையில் உணர்ந்தேன்
மீண்டும்  தனிமைப்படுத்தப்பட்டால்???
நான் உவகை கொள்வது எப்போது..
அல்லது
உன் வருகை தான் எப்போது.....
இதுவரை என் நிலத்தில் பொழிந்த ஒற்றை மேகம் நீ
இடம்மாறி போய்விட்டாய்,
இனி,
என் நிலத்தில் பொழியப்போவது எந்த மேகமோ ??????
 

என் சாலை ஓர மரங்கள்

நேற்று  நீ பார்த்து ரசித்து போன இலைகள்
உன் பிம்பம் பிரதிபலிக்கும் ,
         இன்று நான் நின்று ரசிக்கும்போது.
ஒவ்வொரு நாளும் புதுப்புது தளிர்கள் ,
        உன் பிம்பம் தாங்கும் கண்ணாடியாக ...
அழகாக்கும் நோக்கத்தில் அழிக்கபடுகிறது ஓர்நாள்
தளிரிழந்த தாய் இலைகளும் ,
தாங்கி  நின்ற வேர்களும் ,
வரவேற்கிறது என்னை வாட்டத்துடன்
நானும் வாடினேன்,
         தளிர் ஒன்றில் உன் கண்கள் இருந்த இடம் காணவில்லை ஆதலால் ...